Friday, 25 October 2013


இளங்கோவடிகள்

இயற்றிய

சிலப்பதிகாரம்

பதிகம்
(இணைக் குறளாசிரியப்பா)

குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக்கோச் சேரல் இளங்கோ அடிகட்கு
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி
'பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு, 5

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடு, எம்
கண்-புலம் காண, விண்-புலம் போயது
இறும்பூது போலும்; அஃது அறிந்தருள் நீ' என- 
அவன் உழை இருந்த தண் தமிழ்ச் சாத்தன், 10

'யான் அறிகுவன் அது பட்டது' என்று உரைப்போன்,
'ஆரங் கண்ணிச் சோழன் மூதூர்,
பேராச் சிறப்பின் புகார் நகரத்துக்
கோவலன் என்பான் ஓர் வாணிகன், அவ் ஊர்
நாடகம் ஏத்தும் நாடகக் கணிகையொடு 15

ஆடிய கொள்கையின் அரும் பொருள் கேடுஉற,
கண்ணகி என்பாள் மனைவி - அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டிப்
பாடல்சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர்
மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு 20

மன்பெரும் பீடிகை மறுகில் செல்வோன்
பொன் செய் கொல்லன்-தன் கைக் காட்ட
"கோப் பெருந் தேவிக்கு அல்லதை, இச் சிலம்பு
யாப்புறவு இல்லை; ஈங்கு இருக்க" - என்று ஏகி
பண்டு தான் கொண்ட "சில் அரிச் சிலம்பினைக் 25

கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை" என 
வினை விளை காலம் ஆதலின், யாவதும்
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி,
கன்றிய காவலர்க் கூஉய், "அக் கள்வனைக்
கொன்று, அச் சிலம்பு கொணர்க ஈங்கு" - என 30

கொலைக் களப்பட்ட கோவலன் மனைவி
நிலைக்களம் காணாள், நெடுங்கண் நீர் உகுத்து,
பத்தினி ஆகலின், பாண்டியன் கேடுஉற,
முத்து ஆர மார்பின் முலைமுகம் திருகி,
நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய 35

பலர் புகழ் பத்தினி ஆகும் இவள்' என-
'வினை விளை காலம் என்றீர்; யாது அவர்
வினை விளைவு?' என்ன - 'விறலோய்! கேட்டி:
அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்,
கொன்றை அம் சடைமுடி மன்றப் பொதியிலில் 40

வெள்ளி அம்பலத்து, நள் இருள் கிடந்தேன்;
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன்
மதுரை மாதெய்வம் வந்து தோன்றி,
'கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்!
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது; ஆகலின், 45

முந்தைப் பிறப்பில், பைந்தொடி! கணவனொடு
சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்துச்
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி
இட்ட சாபம் கட்டியது; ஆகலின்,
வார் ஒலி கூந்தல்! நின் மணமகன்-தன்னை 50

ஈர் ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி,
வானோர் தங்கள் வடிவின் அல்லதை
ஈனோர் வடிவில் காண்டல் இல்' எனக்
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான்' என
'அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம், 55

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்' என 60

'முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது,
அடிகள்! நீரே அருளுக' என்றாற்கு அவர்,
மங்கல வாழ்த்துப் பாடலும், குரவர்
மனையறம் படுத்த காதையும், நடம் நவில்
மங்கை மாதவி அரங்கேற்று காதையும், 65

அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையும்,
இந்திர விழவு ஊர் எடுத்த காதையும்,
கடல் ஆடு காதையும்,
மடல் அவிழ் கானல் வரியும், வேனில் வந்து இறுத்தென
மாதவி இரங்கிய காதையும், தீது உடைக் 70

கனாத் திறம் உரைத்த காதையும், வினாத் திறத்து
நாடு காண் காதையும், காடு காண் காதையும்,
வேட்டுவ வரியும், தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும், கறங்கு இசை
ஊர் காண் காதையும், சீர்சால் நங்கை 75

அடைக்கலக் காதையும், கொலைக்களக் காதையும்,
ஆய்ச்சியர் குரவையும், தீத்திறம் கேட்ட
துன்ப மாலையும், நண்பகல் நடுங்கிய
ஊர் சூழ் வரியும், சீர்சால் வேந்தனொடு
வழக்குரை காதையும், வஞ்சின மாலையும் 80

அழல் படு காதையும், அரும் தெய்வம் தோன்றிக்
கட்டுரை காதையும், மட்டலர் கோதையர்
குன்றக் குரவையும் என்று, இவை அனைத்துடன்
காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல்,
வாழ்த்து, வரம் தரு காதையொடு 85

இவ் ஆறு ஐந்தும்
உரை இடையிட்ட பாட்டு உடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள, மதுரைக் 
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது, பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபுஎன். 90

உரை பெறு கட்டுரை

அன்று தொட்டு, பாண்டிய நாடு மழை வறம் 
கூர்ந்து, வறுமை எய்தி, வெப்புநோயும் குருவும் 
தொடர, கொற்கையில் இருந்த வெற்றிவேல் செழியன் 
நங்கைக்குப் பொற்கொல்லர் ஆயிரவரைக்
கொன்று, களவேள்வியால் விழவொடு சாந்தி செய்ய, 
நாடு மலிய மழை பெய்து, நோயும் துன்பமும் நீங்கியது. 1

அது கேட்டு, கொங்கு இளங்கோசர் தங்கள் 
நாட்டகத்து, நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய, 
மழை தொழில் என்றும் மாறாதாயிற்று. 2

அது கேட்டு, கடல் சூழ் இலங்கைக் 
கயவாகு என்பான், நங்கைக்கு நாள் பலி - பீடிகைக் 
கோட்டம் முத்துறுத்து-ஆங்கு, 'அரந்தை கெடுத்து, 
வரம் தரும் இவள்' என, ஆடித் திங்கள் அகவையின், 
ஆங்கு ஓர் பாடி விழாக் கோள் பன் முறை எடுப்ப, 
மழை வீற்றிருந்து, வளம் பல பெருகிப் பிழையா 
விளையுள் நாடு ஆயிற்று. 3

அது கேட்டுச் சோழன் பெருங்கிள்ளி 
கோழி அகத்து, 'எத்திறத்தானும் வரம் தரும் இவள் ஓர் பத்
தினிக் கடவுள் ஆகும்' என, நங்கைக்குப் பத்தினிக் 
கோட்டமும் சமைத்து, நித்தல் விழா அணி நிகழ்வித்தோனே. 

No comments:

Post a Comment