Monday, 9 September 2013


ஆனைமுகத்தான்


ஆனைமுகத்தான் விநாயகருக்குரிய ஆறுபடைவீட்டுக் கோவில்கள் இருக்கின்றன. முதல் படைவீடு திருவண்ணாமலை. கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு பெயர் பெற்ற இங்கு, "அல்லம் போக்கும் விநாயகர்' வீற்றிருக்கிறார். வணங்குபவர்களின் அல்லலைக் களைவதில் இவர் நிகரற்றவராகத் திகழ்கிறார்.இரண்டாம் படைவீடாக இருப்பது விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் கோவில். காசிக்குச் சமமாகத் திகழும் இக்கோவிலில் "ஆழத்துப்பிள்ளையார்' என்ற பெயரில் இவர் காட்சி தருகிறார். பெயருக்கேற்ப பள்ளத்திற்குள் படியிறங்கி இவரைத் தரிசனம் செய்ய வேண்டும். (காளஹஸ்தியிலும் இவ்வாறு ஒரு சந்நிதி உள்ளது) தனியாக கொடிமரம் இவருக்கு அமைந்திருப்பதும் தனிச்சிறப்பு. இவரை வழிபாடு செய்தபின் படியேறி மேலேறுவது போல், வாழ்வில் மேன்மைகளைத் தந்தருள்பவர் இப்பெருமான்.

வள்ளலாக விளங்குகிறார்:மூன்றாவது படைவீடு திருக்கடையூர் அபிராமி கோவில். இங்கு "கள்ளவாரணப்பிள்ளையார்' என்ற திருநாமம் கொண்டுள் ளார். இவரை வழிபடுவோர் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் பெற்று மகிழ்வர். அபிராமிப்பட்டர் அந்தாதியில் இவரைப் போற்றி வணங்குகிறார்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், சித்தி விநாயகராக தன்னை நாடி வருபவர்களுக்கு வாழ்வில் சித்தியை (வெற்றியை) அருளும் வள்ளலாக விளங்குகிறார். அம்மன் சன்னதிக்கு செல்லும் வழியிலுள்ள ஊஞ்சல் மண்டபம் அருகில் இவர் உள்ளார். "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது' என்பதற்கேற்ப, அளவில் சிறியவர் என்றாலும், சக்தி வாய்ந்தவராக உள்ளார். (பிற்காலத்தில் முக்குறுணிப் பிள்ளையார் சன்னிதி உருவானதும் இவரது சந்நிதியில் வழிபாடு குறைந்து விட்டது) மாணிக்கவாசகர், பாண்டியநாட்டு படைக்காக குதிரைவாங்கச் செல்லும் போது இவரை வழிபாடு செய்துவிட்டே கிளம்பினார்.

ஐந்தாம் படைவீடாக பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சிறப்பிடம் பெறுகிறார். சிவலிங்கத்தை வலக்கையில் தாங்கி, சிவபூஜை செய்யும் நிலையில் இப்பெருமான் கேட்ட வரம் தரும் கற்பகவிருட்சமாகத் திகழ்கிறார். ஆறாம் படைவீடு பொல்லாப் பிள்ளையார் கோவில் கொண்டிருக்கும் திருநாரையூர் (கடலூர் மாவட்டம்)ஆகும். பொள்ளுதல் என்றால் செதுக்குதல் என்பது பொருள். உளியால் செதுக்கப்படாமல் தானாகத் தோன்றிய சுயம்பு மூர்த்தியாவார். காலப்போக்கில் இப்பெயர் மருவி பொல்லாப்பிள்ளையார் என்று மாறிவிட்டது.

கிரகதோஷம் போக்குபவர் :

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நன்மையோ தீமையோ அவற்றை நிர்ணயிப்பது கிரகங்களே. நவக்கிரக சுழற்சியினால் வாழ்வில் ஏற்படும் சாதக, பாதகங்களைக் கட்டுப்படுத்தி நம்மை காத்தருள்பவர் நவக்கிரக விநாயகர்.விநாயகரின் பலவிதமான அவதாரங்களில் நவக்கிரக விநாயகர் தனிச்சிறப்புடையது. ஒன்பது கிரகங்களையும் இவர் தன்னுள் அடக்கி இருப்பதால், சக்தி மிக்கவராக விளங்குகிறார். இவர் சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபிக்கமலத்திலும், செவ்வாயை வலது தொடையிலும், புதனை வலது கீழக்கையிலும், வியாழனைத் தலையிலும், வெள்ளியை இடதுகீழ்க்கையிலும், சனியை வலது மேல் கையிலும், ராகுவை இடது மேல் கையிலும், கேதுவை இடது தொடையிலும் கொண்டு காட்சியளிக்கிறார். நவக்கிரக விநாயகரை வழிபாடு செய்வதால் நவக்கிரகதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.

கூப்பிடு விநாயகர் :

காட்டிக் கொடுத்த விநாயகர் என்றதும் தப்புக்கணக்கு போடாதீர்கள். தொலைந்த பொருள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்தவர் இப்பிள்ளையார். ஒருமுறை, தேவாரம் பாடிய மூவரில் ஒருவரான சுந்தரர், தன் நண்பரான சேரமான் பெருமாள் நாயனாரிடம் பொன்னும் பொருளும் ஏராளமாகப் பெற்றுக் கொண்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சுந்தரருடன் திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார் சிவன். சிவகணங்களை வேடர் வடிவில் அவரிடம் அனுப்பி, அவரிடமிருந்த பொன்னையும், பொருளையும் பறித்து மறைத்து வைக்கும்படி ஆணையிட்டார். திருமுருகன்பூண்டி என்ற தலத்துக்கு சுந்தரர் சென்றபோது, பொருள்களை வேடர்களிடம் இழந்தார். இதுபற்றி இறைவனிடம் முறையிட்டார். அங்கிருந்த விநாயகர் சுந்தரரை பெயர் சொல்லி கூப்பிட்டு, பொருளை மறைத்து வைத்திருந்த இடத்தைக் காட்டி அருளினார். அதனால் இவ்விநாயகருக்கு "கூப்பிடு விநாயகர்' என்ற சிறப்புப் பெயர் உண்டானது. கையில் இருக்கும் பொருள்களை தவறுதலாகவோ அல்லது தீயவர்களாலோ இழந்தவர்கள் கூப்பிடு விநாயகரை வழிபட்டால், அவர் அருளால் தொலைந்த பொருள் மீண்டும் வந்து சேரும். கோவை மாவட்டத்தில் திருமுருகன்பூண்டி உள்ளது.

விக்னேஷ் விளக்கம்:

"விக்னம்' என்றால் "தடை'. எனவே தான், தடைகளை நீக்கும் விநாயகரை "விக்னேஷ்' என்பர். ஒரு செயலை செய்ய ஆரம்பிக்கும் முன், அது தடையின்றி நடக்க, விநாயகரை வணங்கி அவருடைய அருளை வேண்டுகிறோம். லலிதா சகஸ்ர நாமத்தில் "மஹாகணேச நிர்பின்ன விக்னயந்த்ர ப்ரஹர்ஷிதா' என்ற நாமா வருகிறது.
அதாவது, அம்பிகை பண்டாசுரனை வதம் செய்யும்போது, விநாயகர் பெரும் உதவி செய்தார் என்பது இதன் பொருள்.
தனது (விநாயக) யந்திரத்தினால் பண்டாசுரனும், அவனுடைய சகாக்களும் விடுத்த அத்தனை பாணங்களையும் வீழ்த்தி தேவியை வெற்றி பெறச் செய்தார் விநாயகர். இதனால் தேவி மகிழ்ச்சி அடைந்தாள். வாழ்வில் குறுக்கிடும் தடைகள் அடியோடு நீங்க விநாயகப் பெருமானை வணங்க வேண்டும்.

ஐந்து ஐந்து ஐந்து :

இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் "பஞ்சகிருத்யங்கள்' எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டிருக்கிறார். அதனால், ஐங்கரன் என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.

பிடித்து வைத்தால் பிள்ளையார்:

பிடித்து வைத்தால் பிள்ளையார் குழந்தை முதல் முதியோர் வரை விநாயகரை வணங்கி எல்லா இடையூறுகளையும் களைய பிரார்த்திக்கின்றனர். அவரை எந்த உருவத்திலும் வழிபடலாம். மஞ்சள் பொடியில் பிடித்து வைத்தாலும், களிமண்ணில் செய்தாலும், மரத்தில் செய்தாலும் அந்த உருவத்தில் நமக்கு அருள்பாலிப்பார். இதைத்தான் 'பிடித்து வைத்தால் பிள்ளையார்' என்பர்.

மூஞ்சுறு வாகனம்:

யானை வடிவம் கொண்ட விநாயகர், மூஞ்சூறு மீது அமர்ந்த ரகசியத்தை கேளுங்கள்.ஒரு பெரிய உருவம், ஒரு சிறிய விலங்கின் மீது ஏறி அமர முடியுமா? நம்ப முடியவில்லையே! என்று தான் விநாயகரின் வாகனத்தைப் பார்த்தவுடன் நினைப்பார்கள். இதில் நுண்ணிய அர்த்தம் உள்ளது. அணுவுக்கு அணுவாகவும், பெரிதுக்கும் பெரிதானவனுமாக கடவுள் இருக்கிறார் என்பதே இதன் தத்துவம். அவரை நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் இது உணர்த்துகிறது. பார்வையில்லாத ஐவர் ஒரு யானையைத் தொட்டுப்பார்த்தனர். ஒருவர் யானையின் வயிறைத் தொட்டு, அது சுவர் போல் இருப்பதாகச் சொன்னார். இன்னொருவர் அதன் வாலைத் தொட்டு கயிறு போல் இருக்கிறதென்றார். மற்றொருவர் காலைத் தொட்டு தூண் போல் உள்ளதென்றார். ஒருவர் துதிக்கையைத் தொட்டு உலக்கை போல் இருக்கிறதென்றார். ஒருவர் காதைத் தொட்டு முறம் போல் உள்ளதென்றார். இதில் எதுவுமே உண்மையில்லை. அதுபோல், கடவுளையும் இன்னாரென வரையறுத்துச் சொல்ல முடியாது. அவரது குணநலன்களை அறிந்து கொள்ள முடியாது என்பதே இதன் உள்ளர்த்தம்.

கணேசினி:


பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையாரை கணேசினி என்றும், கஜானனி என்றும் அழைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில், தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண் வடிவத்துடன் நிற்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில், சுவாமி சந்நிதி நுழைவு வாசலில், கணேசினியின் திருவுருவம்
பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் வியாக்ரபாத கணேசினி எனப்படுகிறார்.

விநாயகரைக் கரைப்பது ஏன்?


கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.

அண்ணனுக்கும் ஆறெழுத்து :


முருகப்பெருமானுக்கு "சரவணபவ' என்ற ஆறெழுத்து மந்திரம் போல, அவரின் அண்ணனான விநாயகருக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. "ஓம் வக்ர துண்டாய ஹும்' என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப்பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.

அப்பா பிள்ளை :

தாயைப் போல பிள்ளை என்பது தான் உலக வழக்கு. ஆனால், தன் தந்தை சிவபெருமானின் தோற்றத்தை விநாயகர் ஒத்திருப்பார். இருவரும் வேறு வேறு அல்லர். சிவபெருமானின் மற்றொரு வடிவமே விநாயகப்பெருமான் என்பர்.
1) சிவபெருமானைப் போலவே விநாயகப்பெருமான் சிவந்த மேனியை உடையவர்
2) சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பது போல ஹேரம்ப கணபதிக்கு 5 தலைகள்
3) இருவருக்கும் மூன்று கண்கள்
4)தலையில் இருவரும் மூன்றாம் பிறையணிந்திருப்பர்
5)இருவரும் பாம்பை ஆபரணமாக அணிந்திருப்பர்
6)தந்தையைப் போல இவரும் ஐந்தொழில்களைச் செய்வர்
7)இருவரும் நடனக்கோலத்தில் காட்சி தருவர்(நடராஜர், நர்த்தன கணபதி)
8)பார்வதி சிவனின் இடப்பாகத்தில் இருப்பது போல், வல்லபை விநாயகரின் இடப்பக்கம் இருப்பாள்.ஐந்து சுவாமி பூஜைபிள்ளையார்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில்விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

விநாயகருக்கு 21 வகை இலை அர்ச்சனை:


விநாயகர் சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்வது சிறந்தது எனப்படுகிறது.
1. முல்லை இலை: அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி: இவ்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. விஸ்வம்: இன்பம், விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல்: அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
5. இலந்தை இலை: கல்வியில் மேன்மையை அடை யலாம்.
6. ஊமத்தை: பெருந்தன்மை கைவரப் பெறும்.
7. வன்னி: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்.
8. அரளி இலை: எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
9. எருக்கம் இலை: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்பு கிடைக்கும்.
10. நாயுருவி: முகப் பொலிவும், அழகும் கூடும்.
11. கண்டங்கத்திரி: வீரமும், தைரியமும் கிடைக்கும்.
12. மருதம்: மகப்பேறு கிடைக்கும்.
13. விஷ்ணுகிராந்தி: நுண்ணறிவு கைவரும்.
14. மாதுளை: பெரும் புகழும் நற்பெயரும் கிடைக்கும்.
15. தேவதாரு: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்.
16. மருக்கொழுந்து: இல்லற வாழ்வு சுகம் பெறும்.
17. அரசம்: உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்.
18. ஜாதிமல்லி: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கும்.
19. தாழம்: செல்வச் செழிப்பு கிடைக்கும்.
20. அகத்தி: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை: நல்ல கணவன்- மனைவி அமையப் பெறும்.

"ஓம்கார நாயகர்':

"விநாயகர்'- என்ற பெயரிலேயே, வினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர் என்ற பொருள் உள்ளது. வினைகளைக் களைபவர், வினைகளை அண்டவிடாமல் விரட்டிக் காத்து ரட்சிப்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளை - வினைகளை - சோகங்களை - தன்னை நாடி வரும் பக்தர்களின் வினைகளைத் துவம்சம் செய்து, அவர்களுக்கு நிம்மதியை அளிப்பவர் என்பதே, விநாயகர் என்பதன் பொருள். தவிர விநாயகரின் உருவமே ஒரு விசித்திரத் தோற்றம் கொண்டது.யானையின் முகத்தை உடையவர். பொன்னிறத் தோற்றத்துடன் கூடிய மனித உடலில், தர்ப்பரி நூல் மார்பு, பேழை வயிறு. (மிகப்பெரிய பூதம் போன்ற வயிறு). துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கைகள். செந்தூரம் பூசிய முகம். சிலம்பு அணிந்த இரு கால்கள். இதுபோன்ற அனைத்து உருவங்களும் சேர்ந்ததே விநாயகப் பெருமானின் மொத்த வடிவம். விநாயகரின் உருவமே, ஒரு ஐக்கியத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அனைத்து நாதங்களுக்கும் முன்னோடியாத் திகழ்வது "ஓம்கார ஒலி' என்றால், அநத "ஓம்காரமாய்' திகழ்வது விநாயகர் என்றால் அது மிகையில்லை. எனவே தான், விநாயகப் பெருமானை "ஓம்கார நாயகர்' என்றும் அழைக்கிறோம்

No comments:

Post a Comment